முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலையில் ஆளனிப்பற்றாக்குறை அதிகளவில் காணப்படுவதாகவும் இதனால் வைத்திய சேவைகள் தாமதமடைவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யுத்தகாலத்திற்குப் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு இப் பிரதேசத்தில் மக்கள் மீள் குடியேற்றப்பட்ட பின்னர் இயங்கிவருகின்ற முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை மிகுந்த ஆளணிப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது.
இங்கு 8 வைத்தியநிபுணர் தேவைப்படும் இடத்து 4 பேர் மட்டுமே கடமையாற்றி வருவதுடன் மகப்பேற்று வைத்தியர் ஒருவர் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
மேலும் நான்கு பல் வைத்தியருக்கான தேவை உள்ளபோதிலும் 3 பல்வைத்தியர்கள் மட்டும் கடமையில் உள்ளதாகவும் 66 தாதியர்கள் தேவைப்படும் இடத்தில் 19 தாதியர்கள் மாத்திரமே உள்ளதாகவும் மருந்தாளர்கள் 6 பேர் தேவைப்படும் பட்சத்தில் இருவர் மட்டுமே கடமையாற்றுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் இவ் வைத்தியசாலைக்கு தினமும் சுமார் 50 வரையான உள்நோயாளர்களும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட வெளிநோயாளர்களும் சிகிச்சைக்காகச் செல்கின்றனர். அத்துடன் 100 இற்கும் மேற்பட்டவர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றும் செல்கின்றனர்.
இந் நிலையில் இங்கு காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையினால்இ நோயாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே விரைவில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்துதருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















