விருத்தியடைந்து செழிக்கும் ஒன்றுக்குள்ளேயே அதன் அழிவுகளின் விதைகளும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. ஸ்ரீலங்கா அரசிற்கு பொதுநலவாய மாநாடு அவ்வகையானதொரு அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை இலங்கை ஏற்பாடு செய்தால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைமைத்துவப் பதவியினை அடைந்தால், உலகநாடுகளின் மத்தியில் உருத்துடனும் (with legitimacy) அந்தஸ்துடனும் உலாவலாம் எனக் கனவுகண்டது. இந்நாடுகளின் மூலம் தனக்குக் கிடைக்கப் போகும் அங்கீகாரம் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புறந் தள்ளும் எனநம்பியது. அதற்காகவே, தனது இயலுமைக்கும் அப்பால் கோடானுகோடி செலவில் இதனை ஏற்பாடு செய்ய முந்திக் கொண்டது. தமிழன் அல்லாத இந்தியர் ஒருவர் இவ்வமைப்பின் செயலாளர் நாயகமாக பதவிவகித்ததும், அவுஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற செல்வாக்கு மிகுந்த நாடுகளில் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் பலவீனம் மிக்க கன்சர்வேடிவ் கட்சிகள் ஆட்சியில் இருந்ததும் அதற்கு அனுகூலமான சூழலை ஏற்படுத்தியிருந்தன. எல்லாம் நன்றாகத்தான் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது பார்த்தால் அம்மாநாடே அரசிற்கு சாவுமணி அடிப்பதைப் போலத் தெரிகின்றது.
வுட மாகாணசபைத் தேர்தலை ஏதோவொரு வகையில் ஒழுங்காக நடத்தி முடிக்கவேண்டியிருந்தது எதனால்? பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட பலநாடுகளை வலிந்து அழைக்க வேண்டியிருந்ததனால். தமிழ் மக்கள் இன்னமும் சுயநிர்ணயக் கோரிக்கையினைக் கைவிடவில்லை என்றும் ஸ்ரீலங்கா அரசின் மீது மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கின்றனர் என்றும் என உலகமக்களுக்கு உணர்த்தப்பட்டது எதனால்? வடமாகாணசபைத் தேர்தலினால். சர்வதேச ஊடகவியலாளர்களை சுதந்திரமாக உலவவிட வேண்டியிருந்தது எதனால்? தான் பத்திரினைச் சுதந்திரம் உள்ளநாடு என பொதுநலவாய நாடுகளுக்கு காட்ட வேண்டியிருந்ததனால். பின்பு இப் பத்திரிகையாளர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் புலனாய்வுத் துறையினரை அவர்களுக்குப் பின்னால் விரட்ட வேண்டியிருந்தது எதனால்? பொதுநலவாய மாநாட்டினை அறிக்கை செய்ய வந்த ஊடகவியலாளர்கள் வடபகுதி நிலைமைகளைப் பற்றியும் செய்திகளை அனுப்பத் துணிந்ததனால்.
இப்பொழுது பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக கருத்தரங்கில் சனல் 4 இதழியலாளர் கலம் மக்ரே எப்படி ஜனாதிபதிக்கு அருகில் வந்து போர்க்குற்றங்கள் பற்றிக் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டார் என்கின்ற விசாரணையும் ஓடிக்கொண்டிருக்கின்றது. அப்பப்பா, இந்தப் பிரச்சினைகள் போதாவென்று இரண்டு பொதுநலவாயநாடுகளின் பெண் அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா அரசிற்குப் புதிய தலையிடியைக் கிளப்பியிருக்கின்றனர்.
அவுஸ்திரேலியா நியூஸிலாந்துநாடுகளின் கிரீன் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செனட்டர்லீரைனோன், மற்றும் ஜான் லோஜி ஆகியோர் இலங்கை வந்து வடக்கிற்கு சென்று நிலைமைகளை அவதானித்து பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படக் கூடாது என ஆணித்தரமான அறிக்கை யொன்றினை வெளியிட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழ் பிரதேசங்களின் நிலைமையை ஆராயப் புகுந்ததும் பொதுநலவாய மாநாடு தொடர்பாக எழுந்த விவாதங்களினால் தான் என்பதைநாம் கவனிக்க வேண்டும்.
ரைனோன், லோஜி ஆகியோரின் அறிக்கையினைப் பற்றிப் பார்க்கமுன்னர், அவர்கள் இயங்கும் கிரீன் கட்சிகளைப் பற்றி மேலோட்டமாகவாவது விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற கைத்தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளில் கிரீன் (பச்சை) கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. சூழல் பாதுகாப்பினைப் பிரதானமான குறிக்கோளாக இவை கொண்டிருந்தாலும், சூழல் பாதுகாப்பானது சமூகநீதி, சமத்துவம், மக்கள் அனைவரினதும் பங்கேற்பு போன்றகாரணிகள் காணப்பட்டாலேயே எய்தப்படலாம் என்கின்ற சித்தாந்தத்துக்கு ஏற்ப, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளாகப் பரிணமித்தன. புpரதான நீரோட்டத்திலிருக்கும் பெரியகட்சிகள் எப்பொழுதும் பாரிய நிதியுதவிகளை வழங்கும் தொழிலதிபர்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும் என்பதனாலும், அவை ஒர்சமூகத்தின் பிரதான நீரோட்டத்திலிருக்கும் கொள்கைச் சித்தாந்தங்களையே பின்பற்றும் என்பதனாலுமே கிரீன் கட்சிகள் மாற்றுக் கட்சிகளாக உருவாக்கப்பட்டன. ஆதிக்குடிகளின் உரிமைகள், தாழ்த்தப்பட்ட இனங்களின் உரிமைகள், பெண்களின் உரிமைகள் போன்ற விடயங்களை இக்கட்சிகளே பெரும்பாலும் அந்நதந்த நாடுகளின் நாடாளு மன்றங்களில் பிரச்சினைகளாக எழுப்பி வந்திருக்கின்றன. சுpறிய மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பது ஒரு முதிர்ச்சியடைந்த அறிவார்ந்த தேர்தல் தொகுதியின் இயல்பாகும். எங்கள் நாட்டிலோ இதற்கு எதிர்மாறாகத்தான் வாக்களிப்பு நடக்கின்றது. புpரதான நீரோட்டத்தில் உள்ள வெல்லக்கூடிய ‘பெரிய’ கட்சிக்கல்லவா நாம் வாக்களிக்க விரும்புகின்றோம்? சுயேட்சையாகவோ அல்லது சிறியகட்சிகளிலோ போட்டியிடும் வேட்பாளர்கள் நிச்சயத் தோல்வியைத் தழுவிக ;கொள்கின்றனர். இன்று, சிறியமாற்றுக் கட்சிகளின் நன்மைகள் எவையென்பதை இன்று ரைனோன் லோஜி ஆகியோரின் நடவடிக்கைகள் மூலமாகநான் கண் கூடாகக் காண்கின்றோம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்தவருடம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வந்து பார்த்து வடக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுகின்றன என்று அரசாங்கத்திற்கு சபாஷ் போட்டுச் சென்றது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இன்று இப் பெண்களோ, சகலரும் போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, போருக்குப் பின்பான காலத்தில்கூட பாரியகுற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். வடக்குப் பெண்கள் இராணுவத்தினருக்கு பாலியல் சேவை வழங்கும் கொத்தடிமைகளாகவும் (ஊழஅகழசவ றழஅநn) உபயோகப்படுத்தப் படுகின்றார்கள் என்கின்ற பயங்கர உண்மையையும் தெரிவித்துச் சென்றிருக்கின்றனர். வடக்கின் இராணுவக் கட்டளையதிகாரி ஹத்துருசிங்கவின் கையடக்கத் தொலைபேசியின் எஸ்எம்எஸ் தகவலை இதற்குக் கோடு காட்டியிருக்கிறார்கள்;. பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படுமாயின், இராஜபக்சவுடன் உலகத் தலைவர்கள் செய்யும் கைகுலுப்புக்களும் வாழ்த்துச் செய்திகளும் அவரை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படுமாயின், தென்னாபிரிக்காவில் இன ஒடுக்குமுறைக்கெதிராகவும், பிஜியில் சிறுபான்மையினரின் ஒடுக்கு முறைக்கெதிராகவும் பொதுநலவாய மாநாடுகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் அர்த்தமற்றதாகப் போய்விடும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இவர்கள் தத்தமது நாடுகளின் நாடாளு மன்றங்களில் தங்களது அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பொழுது அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படப் போகின்றது. பொதுநலவாய அமைப்பிற்கு நிதியுதவி புரியும் முக்கிய நாடான கனடா இதனைப் புறக்கணித்தது ஏற்கனவே ஒருபாரிய பின்னடைவாகும். இவ்வமைப்பில் செல்வாக்குச் செலுத்தும் பெரியநாடான இந்தியாவும் பின்வாங்கிவிட்டது.
இப்பொழுது மொரீசியஸ் நாட்டின் தலைவர்தான் மாநாட்டுக்கு வரவில்லையென அறிவித்திருக்கின்றார். தென்னாபிரிக்காவின் வழக்கறிஞர்சங்கம் அதன் அரசாங்கம் இம்மாநாட்டுக்குப் போகக் கூடாது என அறிவுறுத்தியிருக்கின்றது. கிட்டத்தட்ட சகல அங்கத்துவ நாடுகளிலும் இலங்கையின் போர்க்குற்றங்களின் தன்மைபற்றிய விவாதங்கள் நடந்தேறிக ;கொண்டிரக்கின்றன. சும்மா கிடந்தசங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பர். இதைவிட ஸ்ரீலங்கா அரசுபேசாமல் இருந்திருக்கலாம்.
அடிஎன்னடிஉலகம், இதில் எத்தனைகலகம்
















