பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் இது குறித்து உரிய முறையில் முறைப்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வது மிகவும் முக்கியமானதும் அத்தியவசியமானதுமாகும். அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சனம் செய்யக் கூடாது என்ற உடன்பாடு பொதுநலவாய அமைப்பில் உள்ளது.
எனினும் டேவிட் கமரூன் இலங்கையில் வைத்து வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக எதிர்க்கின்றேன்.
இது குறித்து அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்காது விடின் தவறான முன்ணுதாரணம் கொடுத்ததாக அது ஆகிவிடும்.
இருப்பினும் பிரித்தானிய பிரதமரின் கருத்துக்களை சிறிதாக எண்ணிவிடக் கூடாது. அது தொடர்பாக ராஜந்திர ரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
















