பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி விட்டார் முத்தையா முரளிதரன்; மனோ கணேசன்

mano-ganeshan3அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

இந்த ஆட்சியில் இந்த நாடு இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை. தங்களது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக, இது போன்று கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள்.

ஆனால், இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால் மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாது என பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காணாமல் போன தங்கள் பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இன்று இடம்பிடித்து விட்டார்

1995ம், 1996ம் வருடங்களில் அவுஸ்திரேலிய நடுவர்கள் டெரலும், எமர்சனும், முரளிதரனின் பந்துவீச்சை குற்றம் சாட்டிய போது அது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கட் உலகம் கோரியது.

அதையடுத்து சர்வதேச கிரிக்கட் சபை ஒரு விற்பன்னர்களின் குழுவை நியமித்து முரளிதரனின் உடம்பில் ஆய்வு உபகரணங்களை பொருத்தி, கையை அளந்து பார்த்து மருத்துவ பரிசீலனை செய்து, பந்துவீச்சை படம்பிடித்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியதை முரளிதரனுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்.

அவர் மீது சுமத்தப்பட்ட இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பில் கிரிக்கட் பற்றி எந்தவித அறிவும் இல்லாத அரசியல்வாதிகள் கருத்து கூறுவதும், அதைவிட இதுபற்றி விசாரிக்காமலேயே தீர்ப்பு கூறுவதும் எந்த அளவுக்கு பொறுத்த மற்றதாக இருந்ததோ, அதைவிட இன்று முரளிதரன், இந்நாட்டில் காணமல் போனவர்களின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் கருத்து கூறுவது முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவருக்கு இவரது அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு பற்றியும் தெரியவில்லை, ஐநா மனித உரிமை ஆணைக்குழு பற்றியும் தெரியவில்லை.

இந்த கிரிக்கட் வீரரின் இந்த கூற்று, மனித உரிமைகளுக்காக இந்நாட்டில் போராடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மனித உரிமை போராளிகளையும், தமிழகத்திலும், உலகம் முழுக்கவும் மனித உரிமை போராட்டங்களை நடத்தி வரும் உணர்வாளர்களையும் மிக கடுமையாக அவமானப்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, கைது செய்யப்பட்டு, கப்பம் வாங்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனித உரிமை போராளிகளை, தனது பொறுப்பற்ற கருத்தின் மூலம் முட்டாள்களாக முரளிதரன் அடையாளப்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply