பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் 8 பேர் பலியானார்கள்.
இந்திய தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
ஆனால், இந்திய மத்திய அரசு மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் பொலிசார் செய்து வந்தனர்.
இந்த நிலையில், நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கருப்பு பூனை காவலர்கள் கொண்ட இசட் பிளஸ் எனப்படும் மூன்றடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், இந்த பாதுகாப்பை எல்லாம் மீறி மோடியை கொல்ல பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அவரை “போட்டுத் தள்ளும்” வேலையை பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிடம் ஐ.எஸ்.ஐ. வழங்கியுள்ளதாக ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக, சவுதி அரேபியாவில் உள்ள தீவிரவாதிகள் இரகசிய ஒத்திகை பார்த்து வருகின்றனர். மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல், மோடியின் வாகன வரிசையின் மீது ராக்கெட்குண்டு வீசுவது, வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோத வைத்து சேதம் உண்டாக்குவது உள்ளிட்ட திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டி வருவதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
அனைத்துக்கும் மேலாக, மோடியின் பாதுகாப்பு படையில் கூட லஷ்கர்-இ-தொய்பா இயக்கதின் கைக்கூலிகள் இருக்கக்கூடும் என்று அந்த பத்திரிகை அச்சம் தெரிவித்துள்ளது.
















