தமிழிசை முன் எதிர்ப்பு முழக்கமிட்ட சோபியா பிணையில் விடுதலை

இந்திய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து எதிர்ப்பு முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிணை வழங்கியது.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்த போது அவரைப் பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.

இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை பொலிஸார் கைது செய்த பின்னர் அவரை தூத்துக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சோபியாவுக்கு பிணை கேட்டு தூத்துக்குடி மாவட்ட மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது சோபியாவுக்கு பிணை வழங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சோபியாவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!