இராணுவ தலைமையகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வெளியே வரமுடியாமல், சுமார் 5 நிமிடங்கள் வரை தான் வாகனத்துக்குள்ளேயே கதவை இறுகப் பிடித்துக் கொண்டிருந்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாட்சியமளித்தார்.
குண்டு வெடித்த பின்னர் தான் 5 நிமிடங்கள் வரை வாகனத்தின் கதவை பிடித்துக் கொண்டிருந்ததாகவும் பின்னர் ஒரு இராணுவ அதிகாரி தன்னை அம்புலன்ஸில் ஏற்றி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் கூறினார். இராணுவ தலைமையகத்திலிருந்து பாதுகாப்பு தொடரணியுடன் புறப்பட்டு வந்தபோது வாசலில் நின்ற கூட்டத்தினிடையே நீல நிற சல்வார் அணிந்த ஒரு பெண்ணை கண்டதாக சரத் பொன்சேகா கூறினார்.
கார் இந்த பெண்ணை 2 மீற்றர் அளவில் நெருங்கிய போது அந்த பெண் நின்ற பக்கத்தில் தீச்சுவாலை எழும்பியதாகவும் சாரதி முன்னே சரிந்து கிடந்ததாகவும் தனதருகில் இருந்த இரண்டு காவலர்களும் நிலத்தில் கிடப்பதை கண்டதாகவும் அவர் கூறினார்.தான் 5 நிமிடங்களுக்கு மேலாக கதவைப்பிடித்துக் கொண்டு உதவியை எதிர்பார்த்து இருந்ததாக கூறினார்.
















