நீதிமன்றப் படியேறிய முன்னாள் நீதியரசர் – மீண்டும் முன்னிலையாக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று முன்னிலையான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், அமைச்சர்கள் அனந்தி மற்றும் சிவநேசனையும் மீண்டும் வரும் 18 ஆம் நாள் முன்னிலையாகும்படி நீதியரசர் உத்தரவிட்டார்.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என்று உத்தரவிடக் கோரி, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை பதவி நீக்கியது செல்லாது என்றும் அவர் தொடர்ந்து அமைச்சராக செயற்பட இடமளிக்குமாறும் இடைக்கால உத்தரவை வழங்கியிருந்தது.

எனினும் இந்த உத்தரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை டெனீஸ்வரன் தரப்பு சட்டவாளர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு அமைய நேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார்.

அப்போது முதலமைச்சர் தரப்பு சட்டவாளர் கனகஈஸ்வரன், மேலதிக எதிர்ப்புகளை சமர்ப்பிக்க தமக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து, வரும் செப்ரெம்பர் 18ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

வரும் 18ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய எதிர்மனுதாரர்களான அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை செல்லாது என்று ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஒக்ரோபர் 9ஆம் நாள் வரை நீடிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த தவணையின் போது இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

*வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!