வடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது: சலோகா பெயானியிடம் முறையிட்டார் விக்கி

un-yarlவடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது. தற்போது எமக்குள்ள முக்கிய பிரச்சினை இங்கு குவித்து வைக்கபட்டுள்ள படையினர் தான். அவர்கள் வெளியேற்றப்பட்டாலே இயல்பு வாழ்க்கை என்பது பற்றி யோசிக்கமுடியுமென தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அவர் வடக்கிற்கு பயணம் செய்துள்ளதுடன் வட மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தினில் சந்தித்து உரையாடியிருந்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் எவ்வாறெல்லாம் தமிழ் மக்களது காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது என்பதை தெளிவுபடுத்தியதுடன் ஏனைய பகுதிகள் பற்றி விரைவில் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்த அவர் படையினருடன் இணைந்து சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கையே தொடர்வதாக சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இங்கு இராணுவம் தங்கியிருக்க விரும்புபவர்கள் அவர்கள் எவ்வளவு காலம் இருப்பார்களென்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கோருவதாகவும் தெரிவித்த முதலமைச்சர் எனது கணிப்பின் படியும் இங்கு நடப்பவற்றை பார்த்தாலும் நூறு வருடங்கள் கடந்தாலும் இங்கிருந்து இராணுவம் வெளியேறுமென தாம் நம்பவில்லையென சந்திப்பில் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே தமிழ் மக்களது காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் தொழில்களை இழந்து அவலப்படுவது தொடர்பாகவும் தெரிவித்ததாக கூறிய அவர் இதனிடையே வலி.வடக்கில் கைவிடப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை கற்குவாரி பகுதிகளில் மக்களை குடியமர்த்தி அதனை வருகை தந்துள்ள பிரதிநிதிகளிற்கு மீள்குடியேற்றமென காட்ட திட்டமிடப்பட்டுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான திட்டமிடல் பற்றி ஏதும் தெரியாத நிலையில் கருத்து வெளியிட முடியாதெனவும் தெரிவித்தார்.

இதனிடையே ஆளுநர் மற்றும் அரச அதிபருடனான சந்திப்பின் போது மீள்குடியமர்வு தொடர்பாக அவர்கள் நடத்திய மடிக்கணனி பிரசங்கத்தினை அவர் முற்றாக நிராகரித்திருந்ததுடன் அது பற்றி அக்கறை செலுத்தவும் தவறியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி!!

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் வடக்கிற்கு பயணம் செய்துள்ளதுடன் வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரையும் மற்றும் அரச அதிபருள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மஹிந்த கத்துருசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள சலோகா பெயானி யாழ். வலி வடக்கு கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்கு இன்று பிற்பகல் செல்லவுள்ளார். அங்கு செல்லும் அவர், நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியவுள்ளார்.

இதனிடையே நாளை புதன்கிழமையன்று இறுதிக்கட்ட மோதல் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மார்க் ஆகியோருடனும் பேச்சு நடத்துவார் என அவ்வதிகாரி தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply