பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு பிரித்தானியா காலக்கெடு விதித்துள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த அமர்வுகளுக்கு முன்னதாக மனித உரிமை நிலைமைகளில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். குறித்த காலப் பகுதிக்குள் இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் சர்வதேச விசாரணைகளை பிரித்தானியா வலியுறுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சுயாதீனமானதும் நம்பகமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஏனைய நாடுகளுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை இன்னமும் கைச்சாத்திடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்க அனுமதிக்க முடியாது என ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
















