மீண்டும் சர்ச்சையாக வெடிக்கும் ஆணையிறவு மலர்வளையம்

Deepak-Obhrai2பொதுநலவாய மாநாட்டின் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கிற்கான வான்வழிப் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், இதனால், எட்டு மணிநேரம் தரைவழியாகப் பயணம் செய்தே யாழ்ப்பாணம் சென்றதாகவும், கனடாவின் வெளிவிவகார மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

“யாழ்ப்பாணத்துக்கான வான்வழிப் பாதை மூடப்பட்டதால், எட்டு மணிநேர தரைவழிப் பயணத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை அடைவதை தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை.

அங்கே யாழ்ப்பாண ஆயரையும், வடக்கு மாகாண முதல்வரையும் சந்தித்ததுடன், உதயன் நாளிதழ் பணியகத்துக்கும் சென்றிருந்தேன். யாழ்.ஆயர், வட மாகாண முதல்வர், உதயன் பணிப்பாளர் தவிர்ந்த வேறு யாரை யாரை சந்தித்தேன் என்பதை வெளியிட முடியாது.

அதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். போர் இல்லாத போதிலும் கூட அங்கு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறி மற்றும் மத்திய அரசின் அதிகப்படியான தலையீடுகளால், கடுமையான நெருக்கடிகளை வடக்கிலுள்ள மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக நீதியரசர் விக்னேஸ்வரன் என்னிடம் தெரிவித்தார்.

அங்கிருந்து திரும்பும் போது., ஆணையிறவில், வன்முறைகளில் உயிரிழந்த எல்லா பொதுமக்களினதும் நினைவாக ஒரு மலர்வளையம் வைத்தேன். ஆணையிறவு ஒரு நடுநிலையான இடம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, ஆணையிறவில் மலர்வளையம் வைப்பதற்காகவே, கனேடிய அரசியல்வாதியான தீபக் ஒப்ராய் தரைவழியாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஆணையிறவு ஒரு நடுநிலையான இடம் என்பதன் பொருள் என்னவென்று அவருக்கு மட்டும் தான் தெரியும் என்றும் அது கூறியுள்ளது.

அதேவேளை, தீபக் ஒப்ராய் ஆணையிறவில் வைத்த மலர்வளையத்தின் சிங்கள, ஆங்கில வாசகங்களுக்கும் தமிழ் வாசகத்துக்கும் இடையில் வேறுபாடு இருந்தது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழில் எழுதப்பட்ட குறிப்பில், போரில் உயிரிழந்த எல்லா சிறுபான்மையின பொதுமக்களின் நினைவாக என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுநலவாய மாநாட்டின் போது, வடக்கிற்கான வான்வழிப்பாதை மூடப்பட்டிருந்ததான தீபக் ஒப்ராயின் குற்றச்சாட்டை, சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம நிராகரித்துள்ளார்.

போர் நடந்த பகுதிகளுக்கு செல்ல விரும்பிய வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராகவே இருந்தது.

பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அந்த வசதி செய்து கொடுக்கப்பட்டது.

பொதுநலவாய மக்கள் மன்ற மாநாட்டுக்கு வந்திருந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் முன்னர் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட இரணைமடு ஓடுபாதைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply