வடக்கில் நான் சந்தித்த எல்லோரது விவரங்களையும் வெளியிட முடியாது. அதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையே அங்கு நிலவுகின்றது என்று கனேடிய வெளிவிவகார மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற காலத்தில், இலங்கை அரசு வடக்குக்கான வான்வழிப் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், இதனால் 8 மணி நேரம் தரை வழியாகப் பயணம் செய்தே தான் யாழ்ப்பாணம் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிலுள்ள தமிழ் ஊடகங்களுடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்துக்கான வான் வழிப்பாதை மூடப்பட்டதால், 8 மணிநேர தரைவழியூடான பயணத்தின் மூலம் யாழ்ப்பாணம் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை.
யாழ்.மறை மாவட்ட ஆயர், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் “உதயன்’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஆகியோருடன் வேறு யார் யாரைச் சந்தித்தேன் என்பதை வெளியிட முடியாது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து எற்படலாம்.
போர் இல்லாத போதிலும் கூட வடபகுதியில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வடக்கு மாகாண ஆளுநராக இருக்கின்ற ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி சந்திரசிறி மற்றும் மத்திய அரசின் அதிகளவான தலையீடுகளால் வடக்கில் உள்ள மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பும் போது வன்முறைகளில் உயிரிழந்த எல்லாப் பொதுமக்களினதும் நினைவாக ஆனையிறவில் மலர்வளையம் வைத்தேன். ஆனையிறவு ஒரு நடுநிலையான இடம் – என்றார்.
இதேவேளை – ஆனையிறவில் மலர்வளையம் வைப்பதற்காகவே தீபக் ஒப்ராய் தரைவழியாக யாழ். சென்றார் என்று பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனையிறவு நடுநிலையான இடம் என்பதன் பொருள் என்னவென்று தீபக் ஓப்ராய்க்கு மட்டும் தான் தெரியும் என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
“ஆனையிறவில் வைக்கப்பட்ட மலர் வளையத்தின் எழுதப்பட்டிருந்த சிங்கள, ஆங்கில வாசகங்களுக்கும் தமிழ் வாசகத்துக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகின்றது. தமிழில் எழுதப்பட்ட குறிபில், போரில் உயிரிழந்த எல்லாச் சிறுபான்மையினப் பொதுமக்களின் நினைவாக, என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுநலவாய மாநாட்டின் போது, வடக்குக்கான வான் வழிப்பாதை மூடப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டை, விமானப் படைத்தளபதி எயர் மார்சல் ஹர்ச் அபேவிக்கிரம நிராகரித்துள்ளார்.
போர் நடந்த பகுதிக்கு செல்ல விரும்பிய வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்க அரசு தயாராகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
















