திட்டமிட்ட முறையில் தென்னை பயிர்ச் செய்கை என்கின்ற பெயரில் நிலஅபகரிப்பு: வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் – படங்கள் இணைப்பு

முல்லைத்தீவு மல்லாவியில் தென்னைப்பயிர்ச் செய்கை என்கிற பெயரில் சுமார் 1000 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மல்லாவி சிவன் கோயில் முன்றலில் குறைகேள் மக்கள் சந்திப்பை நடத்திய துரைராசா ரவிகரன் அங்கு கோயில் நிர்வாகம், வர்த்தகர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக திரண்ட மக்களிடம் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். இதன் போது மக்கள் துணுக்காய் பகுதியின் பின்தங்கிய நிலை பற்றி பலவேறு உதாரணங்கள் ஊடாக ரவிகரனிடம் சுட்டிக்காட்டினர். அத்தோடு ‘ பசுமையை நோக்கி’  என்கிற திட்டம் பற்றியும் அதன்  செயலற்ற நிலை குறித்தும் ரவிகரனிடம் எடுத்துக்கூறினர்.

இதையடுத்து ரவிகரன்,  மக்களின் குறைகளுக்கான தகுந்த விளக்கங்களை அளித்ததுடன் சில குறைகளை உரியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறினார். இதையடுத்து  ‘பசுமையை நோக்கி ‘எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இடத்திற்கு, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் வி.யோகலிங்கம், புகழேந்தி நகர் பிரதிநிதி தயாளன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்.

அங்கு சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகளை அழித்து, சேவா லங்கா நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ‘பசுமையை நோக்கி’ திட்டம்  இன்று அவ்விடத்தில் யாருமின்றி கைவிடப்பட்டுள்ளதை  நேரில் பார்த்து உறுதிப்படுத்தினார். அத்திட்டமானது நல்லினமாடுகளை செயற்கை முறையில் சினைப்படுத்தி நல்லினப் பசுக்களைப் பெறுவதன் மூலம், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பளிக்கும் நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டதாகவும் இன்று செயலற்று கைவிடப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் யோகலிங்கம்,  மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார். இதை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்த ரவிகரன்,  அப்பிரதேசத்திற்கு அருகில் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு நின்ற சிங்கள ஊழியரிடம் விசாரித்தபோது தென்னைப்பயிர்ச் செய்கைக்காக 250 ஏக்கர் காடு அழிக்கப்படுவதாகவும் தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்வதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரவிகரன், இங்கு நுட்பமான முறையில் நில அபகரிப்பு இடம்பெறுவது தெரிகிறது. நான் அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்த போது சுமார் 1000 ஏக்கர் அளவிற்கு காடழிப்பு இடம்பெறுகிறது. ஒரு பக்கம் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு என்று நிலம் அபகரிக்கப்பட இன்னொரு பக்கம் பயிர்ச் செய்கைகள் என்கிற பெயரில் காடழிக்கப்பட்டு நுட்பமான முறையில் நிலம் அபகரிக்கப்படுகிறது. இதே வேளை ‘பசுமையை நோக்கி ‘ என்ற 352 மில்லியன் ரூபா மதிப்பு மிக்க திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதனருகில் மேற்கொள்ளப்படும் காடழிக்கப்படும் நடவடிக்கையைப் பார்க்கையில், இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் சந்தேகம் எழுகிறது. இது பற்றி உரியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களுக்கு தெரிவித்தேன் என்றார்.

Tags: ,

Leave a Reply