வெள்ளையரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய மாவீரன் பண்டாரவன்னியன் அவர்களின் நினைவுக்கல் மற்றும் நினைவிடம் யுத்தகாலத்தில் உடைத்தெறியப்பட்டுள்ளது. இந் நிலையில் அதனை மீள அமைத்து பாதுகாத்து தமிழ் வீரன் பண்டாரவன்னியன் வரலாற்றினையும் தமிழர் வரலாற்றையும் பேணும் நோக்குடன் பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகம் மீளமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
யுத்தகாலத்தில் கற்சிலைமடுவில் உள்ள பண்டாரவன்னியன் சிலை உடைத்தெறியப்பட்டுள்ளது. அதனை மீள நிறுவி அழிந்து போன பண்டாரவன்னியனின் வரலாற்றுச் சுவடுகளை மீள உருவாக்கி, பண்டாரவன்னியனின் வளாகத்தினை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். அதனை முன்னெடுத்து எமது வரலாற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகம் மீள அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இப் பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகத்தின் போசகராக வைத்தியகலாநிதி சி.சிவமோகன், தலைவராக எஸ்.ஜெயரட்ணம், செயலாளராக கே.கிருஸ்ணராவ், பொருளாளராக எம்.சிவனேசன் ஆகியோரும் 9 செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


















