ஜேர்மன் மண்ணில் இனி வரும் காலங்களில் பிறநாடுகளின் உளவுபார்க்கும் செயல் மிகவும் கடுமையாக அமையுமென ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.
தூதராலயங்களின் செய்திப் பிரிவிற் கடமையாற்றும் சகலரினதும் விபரங்கள் திரட்டப்பட இருப்பதோடு, தூதராலயம் இயங்கும் கட்டிடத்திலுள்ள சகல தொழிற்நுட்பக் கருவிகள் பற்றிய முழு விபரங்களையும் பெறுவதற்கான உரிமைகளோடு தடையின்றி செயற்படவல்ல அதிகாரம் பெற்ற அரசாங்கப் பிரதிநிதிகள் கடமையிலீடுபடுத்தப்படுவர்.
அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட்ட சகல நட்பு நாடுகளின் செயற்பாடுகளும், அவற்றின் மூலத்திலிருந்து கவனிக்கப்படுமெனவும், ஜேர்மன் மண்ணில் உளவு பார்த்தல் இடம்பெறாதிருக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்விவகார, வெளிவிவகார அலுவலகங்களினதும், அங்கலா மேர்க்கலின் அலுவலகத்தினதும் இறுதி அரசியல் முடிவின் பின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். அங்கலா மேர்க்கலின் கைத்தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட நாளிலிருந்து உளவு பார்ப்பதை முழுமையாகத் தவிர்க்கும் ஒப்பந்தமொன்றை அமெரிக்காவுடன் ஏற்படுத்த முயன்ற ஜேர்மன் அரசிற்கு வெற்றி கிட்டாது போனது.
ஆபத்து ஏற்படும் சமயம் பாதுகாத்துக்கொள்வது கடமையாகிறதென்றும், நட்புப் பாராட்டும் நாடுகளும் ஆபத்தை விளைவிக்கலாமெனும் எண்ணத்தோடு சகலரையும் கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உள்நாட்டுப் பாதுகாப்பு வல்லுனரான மைக்கல் கா(H)ட்மான் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கும் பிறநாடுகளின் அரசியல் நெருக்கடி, ஆபத்திலிருந்து தப்பிக்க இவ்வுலகில் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்று வேறு எதுவும் உதவாதெனும் முடிவிற்கு ஜேர்மன் நாட்டைத்தள்ளி, நட்பு நாடுகளையும் அவதானமாகக் கண்காணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஜேர்மன் பாராளுமன்ற சகல அங்கத்தவரும் கருதுகின்றனர்.
















