குழந்தையை அநாதையாக்கி விட்டு, இறப்பிலும் கைகோர்த்த தம்பதி..!

இந்தியா, கர்நாடகாவில் 3 வயது குழந்தையை அநாதையாக தவிக்கவிட்டு இளம்தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேதன் . இவருக்கு வயது 34 ஆகும். தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வாணி (27) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

சமீப நாட்களாகவே தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. அந்த சமயங்களில் எல்லாம் இரு குடும்ப உறுப்பினர்களும் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவே, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாணி, நேற்றைக்கு முன்தினம் மதியம் தன்னுடைய தாய்க்கு தொலைபேசி மூலம், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சேதனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பள்ளியிலிருந்து விரைந்த சேதன், வீட்டிற்கு சென்ற போது உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது வாணி தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

உடனே தன்னுடைய பெற்றோருக்கு தொலைபேசி மூலம் , நடந்தவற்றை சேதன் கூறியுள்ளார். மேலும், என்னுடைய மனைவி இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேதனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள்ளாகவே இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதியில் மூன்று வயது குழந்தை அநாதையாகியமை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!