தற்போது நடப்பது சமாதான காலம் அல்ல, இது ஒரு இன சுத்திகரிப்பு காலம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்
யாழ். நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினால் காணி வழங்குவதற்கு காணி அளக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து நேற்று (15) மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள சிங்கள மக்களுடன் உரையாடும் போதே அவர் இக் குற்றசாட்டை முன்வைத்தார்.
யாழ். நாவற்குழி பிரதேசத்தில் A 32 வீதியில் உள்ள தேசிய வீடமைப்பு சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 3 வருடங்களாக வசித்து வரும் சிங்கள மக்களுக்கு அக்காணியை பகிர்ந்தளிப்பதற்காக வீடமைப்பு அதிகார சபையினால் காணி அளக்கப்பட்டது.
அக்காணியையே அங்கு குடியேறியுள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக பகிர்ந்தளிக்கவே இன்றைய தினம் அக் காணி அளக்கப்பட்டது.
அங்குள்ள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட காணிகள் அளக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியதால் குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கிஷோர் ஆகியோர் நேரில் சென்றனர்.
இவர்கள் நேரில் செல்வதற்கு முன்னர் காணி அளக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து வீடமைப்பு அதிகார சபையினர் அங்கிருந்து சென்றிருந்தனர். ஆனாலும் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர் நின்றிருந்தனர். அவர்கள் இவர்களை கண்டதும் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறினர்.
அதனை அடுத்து அங்குள்ள மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் முரண்பட செய்யவே அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை செய்கின்றது. இதனை மஹிந்த அரசாங்கம் மட்டுமல்ல சகல சிங்கள தலைமைகளும் விரும்புகின்றன.
இது கூட ஒருவகை இனசுத்திகரிப்பே, தற்போது நடப்பது சமாதான காலம் அல்ல, இனசுத்திகரிப்பு காலம். தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதவாறு இருக்கும் நிலையில் இந்த அரசாங்கம் சிங்கள மக்களை தமிழர் தாயக பிரதேசங்களில் குடியேற்றி வருகின்றது.
இதனால் மீண்டும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் முரண் பட கூடிய சூழ்நிலையை உருவாக்குகின்றது என அவர் உரையாடி கொண்டு இருந்தபோது, தீடிரென அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் முரண்படும் விதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதால் பாராளுமன்ற உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர் மற்றும் நகர சபை உறுப்பினர் ஆகியோர் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.
அங்குள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாம் யாழ்ப்பாணத்தில் கடந்த 1983க்கு முன்னர் வசித்து வந்தோம். நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையினால் நாம் பயத்தின் காரணமாக இங்கிருந்து வெளியேறி இருந்தோம். இப்போது நாட்டு நிலைமை சீரானதால் மீண்டும் திரும்பி உள்ளோம்.
நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே இங்கு வந்து குடியேறியுள்ளோம். இது தமிழர் காணியோ இல்லை தனியார் காணியோ இல்லை. இது அரசாங்க காணி அதனால் தான் நாம் குடியேறினோம்.
இங்கு 136 குடும்பம் வந்திருந்தது. அதில் தற்போது 50 குடும்பங்களுக்கு தலா 1 1/2 பரப்பு காணி வழங்கவுள்ளதாகவே இன்று வீடமைப்பு அதிகார சபையினரால் காணிகள் அளக்கப்பட்டது.
ஆனால் இந்த காணி அவ்வாறு 50 குடும்பங்களுக்கும் வழங்க போதாமை உள்ளதால் எமக்கு வழங்கப்பட உள்ள காணியின் அளவு குறைக்கப்படலாம் அல்லது ஏனையவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படலாம் என அதிகாரிகள் கூறி சென்றதாக அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.
















