பொதுநலவாய அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் திருப்தியளிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கமே வழியமைத்துக் கொடுத்துள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டாக இணைந்து உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தார்.
அதன்படி அந்த உடன்படிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்தில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த உறுதிமொழிகளை அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றத் தவறியுள்ளனர்.
அரசாங்கம் உரிய முறையில் விசாரணை நடத்தத் தவறியதன் காரணமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சர்வதேச விசாரணைகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விசாரணை நடத்தப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தும் முதல் கட்ட நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும்.
சூடான் மற்றம் கிழக்கு திமோரில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















