அரசு இனவாதத்தை தூண்டி வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பள்ளிவாயல்கள் கோயில்கள் இனந்தெரியாத தீவிரவாத குழுக்களினால் உடைக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்திற்கும் அரசாங்கமே மூல காரணமாகும்.
அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வித தேவைப்பாடும் கிடையாது. அதனால் போலியான குழுவான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் காலத்தை அது நீடித்துள்ளது. இக்குழுவின் காலத்தை நீடிப்பதில் எவ்வித பயனுமில்லை.
பாராளுமன்ற தெரிவுக்கழு நியமிக்கப் பட்டவுடனேயே நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இக் குழுவினால் எவ்வித பிரயோசன மும் கிடையாது. இது நாட்டு மக்களை ஏமா ற்றும் போலியான குழுவாகும் என அவர் சுட்டிக்காட்டியதுடன்.
இது ஒரு வெள்ளை யானையைப் போன்றதாகும். இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற முக்கிய கட்சிகள் இணைய மறுப்பு தெரிவித்துள்ளன. இது அரசின் போலியான குழு என்பது அனைவருக்கும் தெரியும்.
அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்தவொரு தேவையும் கிடையாது. இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு இத்தெரிவுக் குழு தேவையில்லை. அரசு நினைத்திருந்தால் தீர்வு எப்போதோ காணப்பட்டிருக்கும். அரசிற்கு இந்நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டிய கடப்பாடு ஒரு போதும் இல்லையென்றே கூற வேண்டும்.
இதேவேளை கடந்த சில மாதங்களாக கோயில்கள் மஸ்ஜிதுகள் உடைக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கூட தெஹிவளையில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்கு தடை விதித்ததுடன் நேற்று கொஹுவளை பள்ளிவாசல் மீது இனந்தெரியாத தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இவையனைத்தும் அரசின் சதித்திட்டமேயாகும்.
இனவாதத்தை தூண்டி வாக்கு வங்கிகளை அதிகரித்து தமது ஆட்சியை தக்க வைப்பதற்காகவே அரசு இவ்வாறு இனவாதத்தை தூண்டுகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
















