மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இன்னமும் தீர்வு வழங்கவில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரம் தொடர்பில் பல்வேறு விடயங்களுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு சாதக நிலைமை ஏற்படக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்தவர்ளுக்கு என்னவாயிற்று என்பது தொடர்பான கேள்விக்கு அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்தவர்களை தவிர்ந்த வேறு எவருக்கும் சரணடைந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாது என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரம் குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடர்பில் பாரிய கேள்வியை எழுப்பியுள்ளதாகக் குறி;ப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அளித்து வரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அரசாங்கம் எவ்வித பதிலையும் அளிக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது எழுப்பிய கேள்விகளுக்குக் கூட அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் கார்பட் இடப்பட்ட பாதைகளைத் தவிர வேறும் பாரிய அபிவிருத்தி எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் நம்பகமானதும், பக்கச்சார்பற்றதுமான உள்ளக விசாரணைகளை நடாத்தும் என்பதில் நம்பிக்கையில்லை எனவும், அதன் காரணமாகவே சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















