இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது என்று தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது.
இது தொடர்பில் பழ.நெடுமாறனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து விசாரணை நடத்த வழிசெய்யும் என்று தெரிவித்திருந்தது. அந்த அறிக்கை வெளிவந்து 24 மணிநேரத்துக்குள்ளேயே, காங்கிரஸ் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்கின்றது. அரைகுறையான அமெரிக்கத் தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது. இந்திய அரசை, இலங்கை அரசு மிரட்டுகின்றது. இந்தியாவின் தென்மண்டல இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத் தளபதியை சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்த ஒளிப்படங்களை சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது.
இது இந்தியாவுக்க விடுக்கப்பட்ட முதலாவது மிரட்டல். எமக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களித்தால் இவ்வாறே சகல விடயங்களையும் வெளிப்படுத்தி விடுவோம் என்று சமிஞ்சை எச்சரிக்கையாக அது அமைந்தது. இந்திய மத்திய அரசு இறுதிப் போரின் போது இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை இலங்கை வெளியிட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே, வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் இந்தியா நழுவியது” என்று தெரிவித்தார்

















