அரசாங்கத்துக்கு சிறுபான்மையினர் ஆதரவு மிக குறை – அமைச்சர் ராஜித

rajitha-senarathne

மேல் மாகாணத்தில் சிறுபான்மையினர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது என அமைச்சர் ராஜித சேனா ரட்ண தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிடும் பேதே அமைச்சர் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 51 தொகுதிகளில் தனது பெரும்பான்மையை நிரூபித்து அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை அரசாங்கம் இன்னமும் சரியாக இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லையென்பதை மேல் மாகாணத்தில் சிறுபான்மையினரின் வாக்களிப்பு உணர்த்துவதாக நான் நினைக்கிறேன்.

இதேபோன்று முஸ்லிம் மக்கள் மீது கடந்த காலங்களில் சில இனவாத சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட எதிர்ப்பலைகள் தொடர்பாக அவர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதையும் காட்டுவதாக நினைக்கிறேன். பேருவளை தொகுதியைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இப்பகுதியில் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மை இன மக்களும் இனவாதப் போக்குகள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்யமாக வாழ்கின்றனர். இதன் பிரதிபலிப்பே இப்பகுதியில் அரசுக்கு அவர்கள் அமோக ஆதரவு வழங்குவற்கான காரணமாக இருக்கிறது என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தேர்தலில் தலைமைத்துவச் சபையொன்றையும் அமைத்து, தேர்தல் களத்தில் இறங்கிய போதும் பலமிழந்த காரணத்தினாலேயே மூன்றாவது சக்தியாக ஜனநாயகக் கட்சியும் ஜே.வி.பியும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி இதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

Tags: , ,

Leave a Reply