பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500 பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சி தொடர்பில் ஊவா மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை மாற்ற ஜனாதிபதி கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்ற போதிலும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எவர் என்ன கூறினாலும் நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மை – ஜனாதிபதி
எவர் என்ன கூறினாலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்றைய அபிவிருத்தியுடன் மக்களின் வாழ்க்கை முறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்தி நாட்டில் வாழும் சகல மக்களுக்கு சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வெலிமடையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டு மக்களை அழுத்தங்களுக்கு உட்படுத்த அரசாங்கம் எந்த வகையிலும் தயாரில்லை.
30 வருடம் நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டுக்கு சுதந்திரத்தையும் அபிவிருத்தியை ஏற்படுத்திக்கொடுத்தது போல், நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
















