வடமாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகி டயஸ்போராவின் கொள்கைகளை நிறைவேற்றும் ஓர் அங்கமாகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த வரவு – செலவு திட்டத்தில் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வித தேவைக்காகவும் பயன்படுத்தப்படாமலிருப்பதே இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
ஏனைய மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, போதுமானதாக இல்லாத சந்தர்ப்பத்தில் வடமாகாண சபை மாத்திரம் மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் இருப்பது அறியாமையா? அல்லது அப்பணம் வேண்டாமென முடிவு செய்துள்ளார்களா என்பது எமக்கு புரியாத புதிராகவே உள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்காத போதிலும் மத்திய அரசாங்கம் வடமாகாணத்தை கைவிடப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ‘கார்பெட்’ இல்லாத வீதிகளேயில்லை.
தற்போது கூட 04 வீதிகளுக்கு ‘கார்பெட்’ போட்டு வருகின்றது. வெளிநாடுகளில் கடன் வாங்கியாவது ரயில் வீதியை புனரமைத்து கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி ரயில் சேவையை ஆரம்பித்துள்ளோம். ‘யாழ்தேவி’ ரயில் யாழ் மண்ணை தொட்டபோது அப்பகுதி வாழ் மக்கள் குதுகலத்தில் ஆரவாரம் செய்தனர். ஆனால் முதலமைச்சரோ, மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களோ அங்கு வருகை தந்திருக்கவில்லை. அவர்கள் எத்தகைய தீர்மானங்களை மேற்கொண்டாலும் மக்களின் மனதை வெல்வதற்கு முடியாது என்பதனை இதனூடாக புரிந்து கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















