‘அவன் சாவுல மர்மம் இருக்கு’.. அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!

மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கவேல். இவரது இளைய மகன் சதீஷ்குமார். இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் சதீஷ்குமார் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சதீஷ்குமார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மனைவி நித்யா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சதீஷ்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சதீஷ்குமாரின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜனவரி 22ம் தேதி மகன் சதீஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மாணிக்கவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் மரணத்தில் மர்மம் இருப்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் முன்னிலையில் சதீஷ்குமார் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. சதீஷ்குமாரின் மனைவி நித்யா பேச்சில் முரண் உள்ளாதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா? இல்லையா? என்பது தெரியவரும் என சதீஷ்குமாரின் சகோதரர் சரவணன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!