கண்களை கட்டிக்கொண்டு உலக சாதனை புரிந்த தமிழ் இளைஞர்!

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்த இளைஞர், கண்களை கட்டிக்கொண்டு ஆங்கில எழுத்துகளை 5.071 நொடிகளில் தலைகீழாக தட்டச்சு செய்து சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்த சுகுமார், சுமதி தம்பதியரின் மகன் இளவரசு(30). பட்டதாரியான இவர், பெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் பெயின்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், துணியால் தன் கண்களை கட்டிக்கொண்டு ஆங்கில எழுத்துகளை இடைவெளிவிட்டு தலைகீழாக 5.071 நொடிகளில் தட்டச்சு செய்துள்ளார்.

இச்சாதனைக்காக, இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். இளவரசனின் உலக சாதனையை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, இவரை நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

இதுகுறித்து, இளவரசன் கூறும்போது, “கரோனா ஊரடங்கு காலத்தில் நான் பணிபுரிந்து வந்த நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், வீட்டில் இருந்தேன். அப்போது, தட்டச்சு மூலம் சாதனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட டென்மார்க்நாட்டை சேர்ந்த ஒருவரை பற்றி இணையத்தின் மூலம் அறிந்தேன்.

இதையடுத்து, தட்டச்சில் சாதனை புரிவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். கின்னஸ் சாதனையில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நபர்கள் இடைவெளியின்றியும் முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்து வரையும் தட்டச்சு செய்துள்ளனர். நான் இடைவெளிவிட்டு மற்றும் தலைகீழாக தட்டச்சு செய்து, கின்னஸ் சாதனை புரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!