போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட டேவிட் கமரூன் யார்? பிரிட்டன் காலனித்துவ ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற, ஊவா வெல்லஸ்ஸ கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று “இராவண சக்தி’ அமைப்பின் தலைவர் இத்தேகந்த சம்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் முன்பாக நேற்றுக்காலை நடத்திய கவனவீர்ப்புப் போராட்டத்தின் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற வந்திருந்த பிரிட்டன் பிரதமரான டேவிட் கமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
கமரூனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, இராவண சக்தி அமைப்பினால் மேற்படி கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டம் தொடர்பில் பொலிஸார் முன்னரே அறிந்திருந்ததால் தூதரகத்தைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தனர். அத்துடன் கலகமடக்கும் பொலிஸாரும் இறக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் நூற்றுக்கணக்கானோரே கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டனுக்கு எதிராகக் கோங்கள் எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் பிரிட்டன் தூதரகத்தின் முதல் நிலைச் செயலரிடம் மனுவைக் கையளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் தொடர்பில் இராவண சக்தி அமைப்பின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கதைப்பதற்குப் பிரிட்டனுக்கு எந்த அருகதையும் இல்லை. 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரிட்டன் காலனித்துவத்துக்குக் கீழ் இலங்கை இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஊவா – வெல்லஸ்ஸ கலவரத்தின் போது பிரிட்டன் படைகளால் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். இதன் போது மீறப்பட்ட மனித உரிமைகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும் – என்றார்.
பிரிட்டன் படைகளால் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். இதன் போது மீறப்பட்ட மனித உரிமைகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும்.
















