பிரேரணையில் போர்க்குற்றத்தை மட்டுமல்ல அடக்குமுறைகள் அனைத்தையும் உள்ளடக்குக; அமெரிக்கக் குழுவிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கோரிக்கை

tamil-refugeeபோர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுடன் மாத்திரம் இலங்கைக்கு எதிரான பிரேரணை நின்றுவிடக்கூடாது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல், காணி அபகரிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் கடுமையான பிரேரணையே கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

உண்மையைக் கண்டறியும் நோக்குடனும், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அடுத்த ஆண்டு இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்தனர்.

இவர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடல்களின் போதே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்க அரசினால் கடந்த இரு தடவைகள் இலங்கைக்கு எதிராகப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் இதுவரை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை.

இனியும் தாமதம் காட்டாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கப்பெற்றால் தான் தமிழ் மக்களால் வாழ முடியும். இல்லாவிடின் தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியாத சூழ்நிலை தான் ஏற்படும்.

தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் திட்டமிடப்பட்ட ரீதியில் அபகரிக்கப்படுகின்றன. வலி.வடக்கில் இராணுவத்தினரால் தமிழ் மக்களின் காணிகள் முகாம்கள் அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ளன. 23 வருடங்களாக அந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்குதல்கள் கொடுத்தும் சிங்கள குடியேற்றப் பரம்பலை ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் இராணுவம் கைப்பற்றியிருக்கின்றது.

இதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மக்கள் காணிகளை வங்கிகளில் அடகு வைக்கின்றனர். அதற்குரிய பணத்தைச் செலுத்த முடியாமல் போகின்றபோது அவை ஏலம் விடப்படுகின்றன. அதை வாங்குவதற்குத் தமிழ் மக்களிடம் பணம் இல்லை.

அதனைத் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாங்குகின்றனர். இங்கு குடியேறுகின்றனர். இதுவும் சிங்கள மயமாக்கலின் ஒரு பகுதியே. எங்கள் மக்களின் காணிகளில் இராணுவ முகாம் அமைத்து இராணுவத்தை தங்க வைக்கின்றனர்.

இராணுவத்தினர் வடக்கில் குறைக்கப்படாமையால் சிவில் விடயங்களிலும் தலையீடு செய்கின்றனர். அத்துடன் இங்கு தங்கியுள்ள இராணுவத்தினரின் குடும்பங்களும் எங்கள் நிலங்களில் மெல்ல மெல்ல குடியமர்த்தப்படுகின்றனர். நாளடைவில் எங்கள் மண்ணில் எங்களைச் சிறுபான்மையினராக்கும் முயற்சியே இது.

இவ்வாறான சிங்களமயமாக்கல், இராணுவமயமாக்கலினால் தெற்குக்கும், வடக்குக்கும் இடையேயான நல்லிணக்க இடைவெளி அதிகரித்துச் செல்கின்றது. இது தொடருமேயானால் தமிழ் மக்களால் இந்த நாட்டில் வாழ முடியாத நிலைதான் ஏற்படும்.

இனியும் தாமதிக்காமல் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே நாங்கள் இந்த மண்ணில் வாழ முடியும்.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டதன் ஊடாக நாம் சந்தோசமடைய முடியாது. அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடமும், ஆளுநரிடமுமே உள்ளது. அதிகாரங்களை மாகாண முதலமைச்சரிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

தனித்துப் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய விடயங்களுடன் மாத்திரம் நின்று கொள்ளாமல் தமிழ் மக்களின் மேற்படி அடிப்படை, அரசியல் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் பிரேரணை கடுமையானதாக அமைய வேண்டும் என்று அமெரிக்கக் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Tags: ,

Leave a Reply